நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைருமான கமல்ஹாசன், திமுக கூட்டணி தொடர்பான செய்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு, அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிலை திறக்கும் விழா நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் கூட்டணி அமையப் போவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது:
மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நாளை நமதே என்றிருந்தது.