திருச்சி: ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரியும், தமிழ்த்தந்தி புலவர் என்றழைக்கப்படுவருமான அ.சிவலிங்கம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவரது விருப்பத்தின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக வழங்கப்பட உள்ளது.
திருச்சி கே.கே. நகர் சேஷசாயி நகர், அன்னை தெரசா வீதியைச் சேர்ந்தவர் அ. சிவலிங்கம் (94). அஞ்சல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் வயோதிகம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தார். தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்வதாகப் பதிவு செய்திருந்தார். எனவே அவரது விருப்பப்படி இன்று திங்கள்கிழமை சிவலிங்கத்தின் உடல் கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட உள்ளது.
தனது பணிக்காலத்தில் சமிக்ஞை குறியீடுகளைப் பயன்படுத்தி பிராந்திய மொழிகளில் தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடிக்க உதவியவர் சிவலிங்கம். இதன் காரணமாக தமிழில் தந்தி அனுப்பப் பட்டதாம். மேலும் இவர் தமிழ்த்தந்தி புலவர் என்றும் அழைக்கப்பட்டார்.
சிறப்புப் பணி மற்றும் பல்வேறு சாதனைகளுக்காக தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
மறைந்த சிவலிங்கத்துக்கு மகன்கள் தமிழ்ச்செல்வன், மோர்ஸ், மகள் மனோன்மணி ஆகியோர் உள்ளனர்.
அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.