சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் பெய்ட்டி புயல், வலுகுறைந்த நிலையில் காக்கிநாடா அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு தெற்கே 95 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் பெய்ட்டி புயல் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 24 கி.மீ. வேகத்தில் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சற்று வலுகுறைந்த நிலையில் காக்கிநாடா அருகே இன்று பிற்பகலில் புயல் கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 - 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புயல் சின்னம் காரணமாக வட கடலோர ஆந்திராவின் ஓரிரு இடங்களில் மிகக் கன மழையும், புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் மிகக் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். வடதிசை காற்று வீசியதால், வழக்கமான வெப்பநிலையை விட 3 டிகிரி குறைவாக இருந்தால் சென்னையில் நேற்று கடும் குளிர் காற்று வீசியது.
3 நாட்களுக்குப் பிறகு வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை வலுவடைந்து, புயலாக உருவானது. இந்த புயலுக்கு பெய்ட்டி என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.