தஞ்சாவூர் ரயிலடியில் எம்.ஜி.ஆர். சிலையையொட்டி, ஜெயலலிதா சிலை ரகசியமாக அமைத்து, திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென திறக்கப்பட்டது.
தஞ்சாவூர் ரயிலடியில் 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதைச் சுற்றி உள்ள சாலையோரப் பூங்காவைத் தேசியமயமாக்கப்பட்ட வங்கி பராமரித்து வருகிறது.
இந்த எம்.ஜி.ஆர். சிலையைச் சுற்றி தகரங்களால் 10 நாட்களுக்கு முன்பு அடைக்கப்பட்டது. இதனுள் சிலை பராமரிப்புப் பணி நடைபெறுவதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த வளாகத்துக்குள் சிலை அமைப்பதற்கான பீடம் அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலையை மாற்றி அமைப்பதற்காக வேலை நடைபெறுகிறது என சிலர் கூறி வந்தனர்.
இந்நிலையில், இச்சிலையைச் சுற்றியுள்ள தகரங்கள் திங்கள்கிழமை நள்ளிரவு அகற்றப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலையில் பார்த்தபோது எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் ஜெயலலிதா சிலை இருந்தது. இந்த இடத்தில் ஏழு அடி உயரம் கொண்ட பீடத்தில் ஏழரை அடி உயரத்தில் ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் ஏறத்தாழ 10 நாட்களாக ரகசியமாகப் பீடம் அமைத்து, சிலையை நிர்மாணித்து திங்கள்கிழமை இரவோடு இரவாகத் திறக்கப்பட்டுள்ளது.
இச்சிலைக்கு அதிமுக பகுதி கழக நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை காலை மாலை அணிவித்தனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், இச்சிலையை யார் வைத்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அமைக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்து, மாலை அணிவித்தோம் என்றனர்.
இச்சிலை முறையாக அனுமதி பெற்று வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இதுதொடர்பாக சர்ச்சை நிலவுகிறது.