மருத்துவர் ஜெயச்சந்திரனின் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 44 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. மருத்துவர் ஜெயசந்திரனின் மரணம் ராயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராயபுரம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 48 வருடங்களாக 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரனின் இறப்பு செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதி மருத்துவசேவை ஆற்றி வாழ்ந்த அவரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் பேரிழப்பு.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.