தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் முல்லைப் பெரியாறு படித்துறை அருகே கிடந்த அம்மன் சிலையை உத்தமபாளையம் வட்டாட்சியர் மீட்டு மாவட்ட நிர்வாகத்திடம் புதன்கிழமை ஒப்படைத்தார்.
உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் உள்ளது. இக்கோயில் முன் செல்லும் முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையிலுள்ள நாகம்மன் சிலைக்கு அருகே புதன்கிழமை அம்மன் சிலை கிடப்பதாக, ஆற்றில் குளிக்கச் சென்ற ஐயப்ப பக்தர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் உத்தமபாளையம் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் உதயராணி ஆகியோர் அங்கு சென்று சிலையை மீட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட சிலை 2 அடி உயரமும், 10 கிலோ எடையும் கொண்டது. இந்த சிலை ஐம்பொன்னால் ஆனதா அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டதா என்பது தொல்லியல் துறை ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என வட்டாட்சியர் உதயராணி தெரிவித்தார்.