மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 94.27 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 1,093 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 16,500 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 57.66 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையின் உபரி நீர் போக்கி பகுதி வறண்டு பாறைகளாகக் காட்சியளிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,093 கன அடியாகச் சரிந்தது. நீர் வரத்து சரிந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் இடது கரையில் உள்ள 16 கண் மதகு பகுதி வறண்டு வருகிறது.