சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே முகம் தெரியாத முகநூல்(ஃபேஸ்புக்) காதலுடன் செல்ல தடையாக இருந்த தாயை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த மகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமம் ஆஞ்சநேயபுரம் 8-வது தெருவில் வசித்து வருபவர் திருமுருகன்-பானுமதி. இவர்களது இரண்டாவது மகள் தேவிபிரியா தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். முகநூலில் அதிக நேரம் செலவிடும் பழக்கம்கொண்ட இவருக்கு மைசூரை சேர்ந்த விவேக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும், ஒருமுறையேனும் பார்த்துக்கொண்டதோ, சந்தித்ததோ இல்லை என்ற நிலையில், முக தெரியாத முகநூல் காதலுக்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்து மகளை கல்லூரிக்கு அனுப்பாமல் கண்டித்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேற திட்டமிட்ட தேவிப்பிரியா, தொலைபேசியில் விவேக்கு தகவல் அளித்துள்ளார். அவரை அழைத்துச் செல்ல விவேக் நண்பர்களான சுரேஷ் மற்றும் விக்னேஷ் என இருவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனை கண்ட தாயார் பானுமதி, தேவிபிரியாவை வீட்டில் இருந்து செல்லவிடாமல் தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மோதலாகியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தேவிபிரியா, பெற்ற தாய் என்றும் பாராமல், தாயை மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, தப்பியோட முயன்ற தேவிபிரியாவின் முகநூல் நண்பர்கள் இருவரையும் விரட்டி பிடித்த மக்கள் அவர்களை சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பானுமதியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கிருந்த தப்பிச்செல்ல முயன்ற தேவிபிரியா மற்றும் இரு நண்பர்களையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகம் தெரியாத முகநூல் நபர்களுடன் ஏற்படும் உறவு, காதலிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அதனை கண்டிக்கும் பெற்றோர்களுக்கும் எமனாகிவிடுகிறது என்பதை மகளின் கொடூர கொலைச் செயல் காட்டுகிறது.