மாநிலத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,884 உதவி மருத்துவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த மாதம் வரை அந்த நடவடிக்கைகள் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் இடங்களை நிரப்புவதற்காக நாட்டிலேயே முதன்முறையாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது.
அதன் மூலமாக இதுவரை 10,933 மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் மற்றும் 4,198 இதர பணியாளர்கள் என 24,664 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், உதவி மருத்துவர் (பொதுப் பிரிவு) நிலையில் காலியாக உள்ள 1,884 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை கடந்த செப்டம்பர் மாதத்தில் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதற்காக 10,018 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 9,353 பேர் (93.4 சதவீதம்) பங்கேற்றனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 2,073 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்குநரக (டிஎம்எஸ்) வளாகத்தில் கடந்த 21-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கின. அதில் 150 பேர் பங்கேற்றனர்.
இதையடுத்து, வரும் புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (டிச. 26, 27, 28) ஜனவரி 3, 4, 7, 8, 9, 10, 11, 21, 22, 23 ஆகிய நாள்களில் மீதமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன், அவர்களில் தகுதியானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.