சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னையில் வியாழனன்று தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்பட்டது
கூட்டத்திற்குப்பின் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் 24708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஜனவரி 9-ந்தேதி திறக்கப்படும். பொங்கள் முடிந்து சென்னைக்கு திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.