உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி என் மீது அவதூறு பரப்பி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. கே. பாலபாரதி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என, வனத் துறை அமைச்சர் சி. சீனிவாசன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் 1 கி.மீட்டர் தொலைவுக்கு கட்டப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்துக்காக கையப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சில நாள்களுக்கு முன் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, நான் கமிஷன் கேட்டு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை காலதாமதப்படுத்தி வருவதாக அவதூறு பரப்பியுள்ளார். அரசியல் லாபத்துக்காக இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டினை அவர் முன் வைத்துள்ளார்.
பொதுமக்கள் நலன் கருதி, நானும் மாவட்ட நிர்வாகமும் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர முயற்சி செய்து வருகிறோம். இதுபோன்ற சூழலில், நில உரிமையாளர்களிடம் கமிஷன் கேட்டு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை காலதாமதப்படுத்துவாக பாலபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது. இதற்கு பாலபாரதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லாதபட்சத்தில், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்றார்.