விழுப்புரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை கிளப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து, ஜெயலலிதா மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி அங்கு தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது யார்? சசிகலா குடும்பம்தான். சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கிதான் வைத்திருந்தார் .
ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார். இருதய பிரச்னை இருந்த போது ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்ய வேண்டாம் எனக் கூறியது யார்?. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அமைச்சர்களான எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை . .
ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முன்னுக்குபின் முரணான தகவல்களை அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்துக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதனை வரவேற்றுளார்.