சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் பிப்ரவரி 15 முதல் 18-ஆம் தேதி வரை 4 நாள்கள் சித்த மருத்துவக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் பூவரசன் கூறியது: 'நலம்வாழ்' என்ற தலைப்பில் சென்னை அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகே உள்ள அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
இதில், 600 வகையான மருத்துவ மூலிகைகளின் கண்காட்சி, நோய்த் தடுப்பு, சிகிச்சை குறித்து சித்த மருத்துவர்களின் கருத்தரங்கம், நிலவேம்பின் முக்கியத்துவம், பெண்கள், குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகள், இலவச சித்த மருத்துவ முகாம், யோகா, மூச்சுப்பயிற்சி பயிலரங்கம், வீட்டு மாடியில் மூலிகைத் தோட்டம் அமைப்பதன் முக்கியத்துவம், தமிழர்களின் பாரம்பரிய நெல், சிறுதானியம், உணவு வகைகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற உள்ளன.
நுழைவுக் கட்டணம் ரூ.1: காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 1 வசூலிக்கப்படும் என்றார்.