காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து, ஒகேனக்கல் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர்.
கர்நாடக மாநிலம், கபினி அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கவும், ஆற்றில் பரிசலில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், திங்கள்கிழமை அன்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது.
இதையடுத்து, ஒகேனக்கல் அருவியில் குளிக்க, சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, சுற்றுலா வந்த பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். ஆனால், பரிசல் இயக்க 3-ஆவது நாளாகத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீர் வரத்து மேலும் குறையும் பட்சத்தில், பரிசல் இயக்கும் தடையை நீக்க வாய்ப்பு உள்ளதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.