எந்தப் பதவியிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொடி ஏற்றவுள்ளதாக முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு திமுக-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 15-ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் முரசொலி நாளிதழில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின், 7 இடங்களில் திமுக கட்சிக் கொடியை ஏற்றுவார் என்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கட்சியின் எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவர் தற்போது முதன் முறையாக திமுக கொடியை ஏற்றவுள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் கட்சியின் குறிப்பிட்ட பதவிகளுக்கு வந்த பிறகு தான் திமுக கொடியை ஏற்றியுள்ளனர். கட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் அல்லது மூத்த நிர்வாகிகள் ஆகியோர் மட்டுமே இதுவரை திமுக கட்சிக் கொடியை ஏற்றிவந்த வேளையில், எந்தப் பதவியிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த முக்கியத்துவம் அளித்துள்ளது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.