நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்துள்ள தீர்ப்பு குறித்து இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கலந்தாலோசித்த பிறகு, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் பேசியதாவது:
தமிழ் வழியில் படித்து நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. புதுவையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ் வழியில் இத்தேர்வை எழுதி, தவறான அர்த்தத்தில் கேட்கப்பட்ட கேள்விகளால் வெற்றி பெறும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இந்த நிலையில், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது.
எனவே, தீர்ப்புக்கு முன்பு வெளியிடப்பட்ட சென்டாக் தரவரிசைப் பட்டியலை ரத்து செய்து, நீதிமன்ற தீர்ப்பின்படி புதிய தரவரிசைப் பட்டியலை தயாரித்து, அதனடிப்படையில் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சிபிஎஸ்இயிடம் அரசு புதிய தேர்வுப் பட்டியல், தரவரிசைப் பட்டியலைப் பெற வேண்டும். அதன்பிறகு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு முதல்வர் நாராயணசாமி அளித்த பதில்:
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில், சென்டாக் நிர்வாகத்திடம் பேசிய பிறகு, மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.