வருமான வரித்துறை சோதனையின் விசாரணை சுதந்திரமாக நடைபெற முதல்வர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மற்றும் அவருடைய பார்ட்னர் (Partner) ஆகியோருடைய வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்திய நேரத்தில் 180 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 100 கிலோ தங்கமாகவும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில், பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகவே வெளிவந்திருக்கிறது.
பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதல்வராகவும் இருக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. இதுவரை முதல்வருடைய உறவினர்களுக்கு இப்படி ஒரு டெண்டர் விட்டதாக வரலாறு கிடையாது. இந்தச் செய்திகள் எல்லாம் ஊடகங்களில் பத்திரிகைகளில் எல்லாம் மிகத்தெளிவாக வெளிவந்திருக்கின்ற இந்த நிலையில், முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி இதுவரையில் வாய் திறக்காமல் அமைதியாக மௌனமாக இருந்து கொண்டிருக்கிறார்.
எனவே, மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி! ஆகவே, இதற்கு அவர் முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, விசாரணை முழு அளவில் சுதந்திரமாக நடைபெற வேண்டுமென்று சொன்னால் உடனடியாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது தான் சாலப் பொருத்தமாக இருக்க முடியும்.
அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்னையை பொறுத்தவரையில் இலஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே, இந்த ஆட்சியிலே தொடர்ந்து வருமான வரித்துறையினர் ரெய்டுகளை நடத்தி உள்ளனர். உதாரணமாக ராம் மோகனராவ், அமைச்சர் விஜயபாஸ்கர், மணல் மாபியா சேகர் ரெட்டி, போன்றவர்களுடைய இல்லங்களிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அவை எல்லாம் என்ன ஆனது என்பது இன்னும் கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கிறது.
அதுபோல இதுவும், நீர்த்துப் போவதற்குள் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு முழுமையான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தான் நாங்கள் எதிர்பார்க்கக் கூடிய நிலைமை.
தி.மு.க ஆட்சிக் காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் எல்லாம் நடக்கவில்லை. குறிப்பாக இதுபோன்று வருமான வரித்துறை எல்லாம் சோதனை செய்யவில்லை. இன்றைக்கு இவர்கள் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். அதற்குச் சான்றாக முதலமைச்சருடைய சம்பந்திகளே இருக்கிறார்கள் இதற்கு என்ன ஜெயக்குமார் பதில் சொல்கிறார் என்று கேளுங்கள்.
நீட் தேர்வை தமிழ் வழியாக எழுதுகிற மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு வருவதற்கு கூட தமிழக அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அதிலே மதுரை உயர்நீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்பை தந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினுடைய மாநிலங்களவை உறுப்பினர் டிகே.ரங்கராஜன். இப்பொழுதாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு நீட் பிரச்னைகளில் இதுவரை மெத்தனமாக இருந்ததை போல் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கக்கூடிய இந்த சூழ்நிலையிலே, முறையாக முறையான வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.
செயல் தலைவர்: துணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது தி.மு.க சார்பில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.