சென்னை: சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கலப்புத் திருமணம் செய்து கொண்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த விமலா தேவி என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2016-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
ஆனால் இந்த அறிவுரைகள் எதனையும் தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறி தமிழகத் தீணடாமை ஒழிப்பு முன்னணி என்னும் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 'சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். அத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள பிற நடவடிக்கைகளையும் எடுத்துரைத்து, தமிழக அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட பின்னர் வழக்கினை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.