சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 'லுக் அவுட்' நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஆஜராகவில்லை எனக்கூறி தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அவருக்கு எதிராக இரண்டு 'லுக்அவுட்' நோட்டீசுகளை சிபிஐ பிறப்பித்தது.
இந்த நோட்டீஸை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ இறுதி வாதங்கள் கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 'லுக் அவுட்' நோட்டீஸை ரத்து செய்து திங்களன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.