ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதற்கட்ட விசாரணை தொடக்கம்: தமிழக அரசு தகவல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதற்கட்ட விசாரணை தொடக்கம்: தமிழக அரசு தகவல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தார் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகளை குவித்ததாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். ஆனால், இந்த வழக்கு மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை. இதையடுத்து,  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.  

இந்த வழக்கு மீதான விசாரணையில், ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியிருப்பதாக தமிழக அரசு சார்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை துரிதமாக நடைபெறவில்லை என்றால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்தது. 

வழக்கு விவரம் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு விவரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு, சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் மற்றும் தொழில் ரீதியான நண்பர்களான ஆர்.சுப்புராஜ், அவரது மனைவி உமா மகேஸ்வரியின் பெயரில் பல கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.

இதே போன்று பல பினாமிகளின் பெயரிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் அமெரிக்கா, மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். அவரது மகன்கள் பல இந்திய நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளனர். 

வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை: தொழிலதிபர் சேகர்ரெட்டியிடம் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்த டைரியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 கோடி கொடுத்ததாக குறிப்புகள் உள்ளன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கடந்த மார்ச் 10- ஆம் தேதி புகார் அளித்தேன். அதன் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் எமிலியாஸ், இந்தப் புகாரை மனுதாரரிடமிருந்து பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது: 

"இந்தப் புகார் கொடுத்து 3 மாதங்கள் ஆகிறது. இது தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சேகர் ரெட்டியின் டைரி குறிப்பில் பன்னீர்செல்வத்தின் பெயர் உள்ளதாக புகாரில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது?" எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் மணிசங்கர், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை புதன்கிழமை நீதிமன்றத்தின் முன் வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com