புதிய மின் பகிர்மான வட்டங்கள் மற்றும் கோட்டங்கள் உருவாக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பேரவையில் வியாழக்கிழமை அறிவித்தார்.
பேரவையில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தை இரண்டாகப் பிரித்து ரூ.8.77 கோடி மதிப்பீட்டில் ஆரணியில் புதிய வட்டம் அமைக்கப்படும்.
சென்னையில் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் கண்காணிக்க ரூ.4.31 கோடி மதிப்பீட்டில் சென்னை வளர்ச்சி வட்டம் அல்லது திட்டங்கள் என்ற புதிய வட்டம் உருவாக்கப்படும்.
ஊட்டி மின் பகிர்மான கோட்டத்தை இரண்டாகப் பிரித்து, கூடலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மின் பகிர்மான கோட்டம் ரூ.1.84 கோடியில் அமைக்கப்படும்.
தாம்பரம் மின் பகிர்மான கோட்டத்தை இரண்டாகப் பிரித்து பல்லாவரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மின் பகிர்மான கோட்டம் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். நாமக்கல் மின் பகிர்மான வட்டத்துக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய மத்திய அலுவலகக் கட்டடம் அமைக்கப்படும்.
மயிலாப்பூர் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலைய வளாகத்தில் ரூ.16 கோடி செலவில் ஒருங்கிணைந்த கணினி மின்தடை நீக்க மையம், ஸ்கேடா மையம், புதிதாக அமையவிருக்கும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், தலைமைப் பொறியாளர் அலுவலகம் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடம் அமைக்கப்படும்.
கள உதவியாளர் பணி: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மண்டலத்துக்கு மொத்தம் 1,000 கள உதவியாளர் மற்றும் பிற மண்டலங்களுக்கு 1, 000 கள உதவியாளர் பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படுவர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 150 உதவிப் பொறியாளர் (மின்னியல்) 23 உதவிப் பொறியாளர் (சிவில்), 25 உதவிப் பொறியாளர் (இயந்திரவியல்) மற்றும் 250 இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்துத் தேர்வு மூலமாகத் தேர்வு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்யப்படுவர் என்றார்.