சென்னை: எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் தமிழக அரசு சுதந்திரமாக வெளியே விட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றம் வரையிலும் மறுக்கப்பட்ட போதிலும், அவரை இன்னும் தமிழக போலீசார் கைது செய்யவில்லை. ஐம்பது நாட்களைக் கடந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படாமலதான் இருக்கிறார்.
இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்பொழுது நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் எஸ்.வி.சேகர் விவகாரம் எதிரொலித்தது.பேரவையில் புதனன்று எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் முயன்றார். ஆனால் அவருக்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
எஸ்.வி.சேகரை கைது செய்ய உண்மையாகவே தமிழக அரசு விரும்பவில்லை. அவர் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால், அவரை சுதந்திரமாக வெளியே சுற்றித் தெரியுமாறு அரசு விட்டுள்ளது. சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் கூட அவர் போலீஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதைப் பற்றி அவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.