ஹைதராபாத்: சென்னை விமான நிலையத்தை ரூ.2,476 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கிடைப்பது உறுதியாகியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மதிப்பீடு நிபுணா் குழு (இஏசி) கடந்த மே 30-ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது, சென்னை விமான நிலையத்தில் ஏற்கெனவே உள்ள 1301.28 ஏக்கரில் கூடுதல் விரிவாக்க பணிகளை மேற்கொள்வதற்கு அந்தக் குழு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, விமான விரிவாக்க திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கலாம் என இஏசி குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கைவசம் உள்ள நிலத்திலேயே விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், கூடுதலாக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
சென்னை விமான நிலையத்தில் இதுவரை ஆண்டு ஒன்றுக்கு 1.40 கோடி மக்கள் பயணம் செய்கின்றனா். இந்நிலையில், கூடுதல் விரிவாக்க பணிகள் முடிந்த பிறகு ஆண்டு ஒன்றுக்கு 3 கோடி மக்கள் பயணிக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விமான நிலைய விரிவாக்கம் குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சாா்பில் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
விமான நிலைய விரிவாக்க கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.2,476 கோடி செலவிடப்படவுள்ளது. விரிவாக்கத்தின் மூலம், 350 போ் நேரடியாகவும், 900 போ் வரை மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறவுள்ளனா்.
அதே சமயம், விமான நிலையத்துக்கு தேவையான அனுமதிகளை மாநில அரசு மற்றும் விமான போக்குவரத்து துறையின் பொது ஆணையரிடம் பெற வேண்டும் என்று இஏசி பரிந்துரை செய்துள்ளது.