மதுரை: குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்தவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இன்று மதுரை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மதுரை அரசு மருத்துவனைக்குச் சென்று, தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும், காயமடைந்தோரின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்களிடம் ஆளுநர் கேட்டறிந்தார்.
மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், அமைச்சர் அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த துயரமுற்றேன். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாகவும் ஆளுநர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.