நவநீதகிருஷ்ணனுக்கு விஷமும், தூக்கு கயிறும் தயார்: புகழேந்தி
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வதற்கும் தயாராக உள்ளோம் என மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் 29-ஆம் தேதி கூறினார். காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வந்த நிலையில், அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மகேந்திரனின் தில்லி முகவரிக்கு பொள்ளாச்சி கிணத்துக்கடவுப் பகுதியைச் சேர்ந்த பெரியார் மணி என்பவர் எலி மருந்து அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்கொலை செய்துகொள்வதாய் கூறிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு விஷம் அளிக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த புகழேந்தி கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவருக்கு எவ்வாறு தற்கொலை செய்துகொள்வது என்பதில் குழப்பம் இருக்கலாம். எனவே அவருக்கு விஷம் மற்றும் தூக்கு கயிறு ஆகியவை தயாராக உள்ளது என்றார்.