ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இன்று வியாழக்கிழமை (நவ.1) அதிகாலை கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்தபோது ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். மேலும் துப்பாக்கி முனையில் விசைப்படகுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வெட்டி கடலில் எறிந்து விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பியனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியது: இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க முடியாதவாறு கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களின் பாரம்பரிய இடங்களில் அச்சமின்றி மீன்பிடிக்க ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசு மற்றும் இலங்கை மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முறையில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.