புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: நிலம் அளிக்குமா தமிழகம்?

தமிழகம் நிலம் கொடுத்தால் மட்டுமே புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, நில ஆர்ஜிதம் செய்து புதுவை அரசுக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: நிலம் அளிக்குமா தமிழகம்?

புதுச்சேரி: தமிழகம் நிலம் கொடுத்தால் மட்டுமே புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, நில ஆர்ஜிதம் செய்து புதுவை அரசுக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுவைக்கு நிதி ஆதாரமாக இருப்பது சுற்றுலாத் துறை. இங்குள்ள அழகிய கடற்கரை, புராதன கோயில்கள், பிரெஞ்சு  கலாசாரத்தை பிரதிபலிக்கும் கட்டடங்கள் உள்ளிட்டவை உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளன.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டில் புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை 9.5 சதவீதம் உயர்ந்துள்ளது என்கிறது புதுவை அரசின் புள்ளிவிவரம். வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வகையில் புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விமான சேவையை விரிவாக்கம் செய்ய புதுவை அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

புதுவையை பொருத்தவரை புதுச்சேரி லாசுப்பேட்டையில் மட்டுமே விமான நிலையம் உள்ளது. இங்கு முதல் விமான சேவை 7.1.2013-இல் தொடங்கப்பட்டது. இந்த விமான நிலையத்துக்கு முதல் விமானம் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் இயக்கப்பட்டது. பின்னர் ஏர்இந்தியா நிறுவனம் மூலம் புதுச்சேரி-பெங்களூரு இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும், போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் சிறிது காலத்திலேயே நிறுத்தப்பட்டன.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் சிறு நகரங்களில் விமான சேவையை அதிகரிக்கும் வகையில் புதிய விமான கொள்கையை அறிவித்தது. அதன்படி "உடான்' திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதிக் கட்டணத்தை,  மத்திய அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரி - ஹைதராபாத் இடையே விமான சேவையைத் தொடங்கியது. பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் பெங்களூருக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத் இடையே தினசரி பயணிகள் விமான சேவை உள்ளது.

இதைத்தொடர்ந்து, ஏர் ஒடிஷா கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல், புதுச்சேரி, சென்னை, சேலம் இடையே விமான சேவை தொடங்கத் திட்டமிட்டு, நேரத்தையும் அறிவித்து, முன்பதிவைத் தொடங்கியது. பிறகு, இந்த விமான சேவை திட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சேவையை தொடங்க புதுவை அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

புதுச்சேரியில் இருந்து பிற மாநில சேவைகள்: புதுச்சேரியில் இருந்து தில்லி, மும்பை, கோவாவுக்கு இணைப்பு விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கடந்த ஆக. 29-ஆம் தேதி தொடங்கியது. தற்போது புதுச்சேரியில் இருந்து முற்பகல் 11.45 மணிக்கு ஹைதராபாதுக்கு  விமானம் செல்கிறது. அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் மாலை 6.35 மணிக்கு கோவா செல்ல முடியும். அதேபோல ஹைதராபாதில் இருந்து புறப்படும் மற்றொரு இணைப்பு விமானம் மூலம் புதுதில்லி சென்றடையலாம். மேலும், புதுச்சேரி - பெங்களூரு இடையே தினசரி விமான சேவை உள்ளது.

விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகள் குறைவாகவே புதுச்சேரி விமான நிலையத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது, இந்த விமான நிலையத்தில் 1,500 மீட்டர் நீளத்துக்கான ஓடுதளம் மட்டுமே உள்ளது. இதனை ஏடிஆர்-48, ஏடிஆர்-78, க்யூ-400 போன்ற சிறு விமானங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, இந்த ஓடுதளம் சுமார் 2,500 மீட்டர் வரை இருக்கும் வகையில் அமைத்தால், பெரிய ரக விமானங்கள் எளிதாக வந்து செல்ல முடியும். இதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் பயனடைவார்கள்.

இந்த ஓடுதளத்தை இப்போதுள்ள நீளத்தில் இருந்து மேலும் 1,000 மீட்டர் நீட்டிக்க வேண்டுமெனில் 212 ஏக்கர் நிலப்பரப்பு தேவை. விமான நிலையத்தை சுற்றிலும் தமிழகப் பகுதிகளான விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட மொரட்டாண்டி, தைலாபுரம், பட்டானூர், ஆரோவில் பகுதிகளே இருப்பதால் விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான கூடுதல் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை.

ஏற்கெனவே இந்திய விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளைக் கொண்டு நடத்திய ஆய்வின்படி, விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் ஆர்ஜிதம் செய்ய ரூ.200 கோடி தேவை என மதிப்பீடப்பட்டுள்ளது.


தொழில் வளர்ச்சி அடைய...

புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் புதுச்சேரி, ஆரோவில், புதுவையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகள் பலனடையும். இதன் மூலம் புதுவை, தமிழகப் பகுதிகளில் சுற்றுலா, தொழில் உள்ளிட்ட துறைகள் மிகப் பெரிய வளர்ச்சி அடையும். புதுவை யூனியன் பிரதேசமாக இருப்பதால் விமான நிலைய விரிவாக்கத்துக்கான முழுத் தொகையையும் ஏற்க இயலாது. எனவே, நில ஆர்ஜிதத்துக்கான தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என புதுவை அரசு வலியுறுத்தியுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நில ஆர்ஜித தொகையை மத்திய அரசு தருவதாக கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது.

விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக - புதுவை தலைமைச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இப்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் உடன்பாடு எட்டப்பட்டவுடன் நில ஆர்ஜிதம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புதுச்சேரியில் இருந்து கொச்சி, திருப்பதி, கோவை நகரங்களுக்கு விரைவில் விமான சேவை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி-ஹைதராபாத், பெங்களூரு இடையிலான விமான சேவை முழு வெற்றி அடைந்துள்ளது. இந்த விமானங்களில் 94 சதவீத இருக்கைகள் நிரம்பிவிடுகின்றன. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வர இந்த விமான சேவைகள் பெரிதும் உதவுகின்றன. தொழில் ரீதியாக பிற மாநிலங்களுக்கு செல்வோருக்கும் இந்த விமான சேவை மிகவும் வசதியாக இருக்கிறது. இதனால், சுற்றுலாத் துறை, தொழில் துறை உத்வேகம் பெறும். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேலம், சென்னை விமான சேவைகளும் விரைவில் தொடங்கும். விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டால் பிரான்ஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு புதுச்சேரியில் இருந்து நேரடி விமான சேவையைத் தொடங்க முடியும் என்றார் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com