சென்னை: சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நேற்று (நவம்பர் 6) வெளியாகியுள்ளது.
விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது:
சர்கார் படத்தில் உள்ள சில காட்சிகள் தொடர்பாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளது அவற்றில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையிலும், அரசியல் உள்நோக்கத்துடனும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
படக்குழுவினர் அவர்களாக காட்சிகளை நீக்கி விட்டால் நல்லது. இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு செயல்படுவது வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு நல்லதல்ல இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.