இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் 4 சதவீதம் குறைந்துள்ளது என்றார் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: கடந்த 40 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் 16.4 சதவீதமாக இருந்தது. பாஜக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நான்கு சதவீதம் குறைந்து 12.4 சவீதமாக உள்ளது.
நாடு முழுவதிலும் அனுமதியின்றி 2,500க்கும் அதிகமான குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காப்பகங்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குழந்தைகளின் உடல் உறுப்புகள் அயல்நாட்டிற்கு விற்கப்படுவதை இந்த காப்பகங்களில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, நாடு முழுவதிலும் தொழிற்சாலை, கடைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் காப்பகம் நடத்தி வருவோர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் தங்களுக்கு ஏற்படக்கூடிய குற்றச்செயல்கள் குறித்து அவர்களே புகார் அளிக்கக்கூடிய "யானா' என்ற செயலி வருகிற டிச.24ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் பயிற்சி அளிக்கும் மனநல ஆலோசகர்களுக்கு டிசம்பர் மாதம் புதுதில்லியில் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றார் ஆர்.ஜி.ஆனந்த்.