தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை: தொடங்கியது சர்கார் நடவடிக்கை?

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   
தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை: தொடங்கியது சர்கார் நடவடிக்கை?

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நவம்பர் 6 அன்று  வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் புதனன்று காலை கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ , 'சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு செயல்படுவது வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு நல்லதல்ல' என்று தெரிவித்திருந்தார். 

அதேபோல இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் புதன் மதியம் கருத்து தெரிவித்திருந்தார். 

அதேசமயம் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் புதன் மாலை நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், 'சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் சர்கார் படக்குழுவினர் வன்முறையைத் தூண்டும் வகையில் தீவிரவாதிகள் போன்று செயல்படுகின்றனர். அத்தகைய காட்சிகளுக்காக நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் வியாழன் காலை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   

சர்க்கார் படத்திற்கு எதிராக புதனன்று மூன்று தமிழக அமைச்சர்கள் கருத்துக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com