உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக, தமிழகத்தில் 2,179 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தீபாவளியின் போது காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு அறிவித்தது.
காவல்துறை குழப்பம்: உச்சநீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க போலீஸார் அறிவுறுத்தினர்.
இச்சட்டத்தின்படி அதிகபட்சம் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் சத்தம் எழுப்பும் வெடிகளுக்குத்தான் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது, மத்தாப்பு போன்ற சத்தம் எழுப்பாத பட்டாசுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என தீயணைப்புத்துறை டிஜிபி கே.பி.மகேந்திரன் தெரிவித்தார்.
வழக்கமான கொண்டாட்டம்: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், தமிழகத்தில் வழக்கம்போல அனைவரும் தொடர்ந்து பட்டாசு வெடித்தனர். இதனால் பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தொடர்ந்து வெடித்த பகுதிகளுக்கு போலீஸார் சென்று, எச்சரிக்கை விடுத்தனர். இப்பகுதிகளில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீஸார் வழக்கையும் பதிவு செய்தனர். சிறுவர்கள் பட்டாசு வெடித்தது தெரியவந்தால், அவர்களது பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவு, தீபாவளி கொண்டாட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
2,179 பேர் மீது வழக்கு: குடியிருப்பு, வணிகப் பகுதிகளில் நேர கட்டுப்பாட்டை தாண்டி பட்டாசு வெடித்தவர்கள் மீது அரசின் உத்தரவை மீறி செயல்பட்டது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.