ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்றாதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு, பேராசிரியை நிர்மலா, முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக காமராஜர் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்காணாது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை (03.11.18) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோரை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
மூவரின் சார்பிலும் தனித்தனி வழக்கறிஞர்கள் ஆஐராகி வாதாடினர். அரசு தரப்பில் மூவர் மீதும் எந்த பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நிர்மலாதேவி , முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது கூட்டுச்சதி , பெண்களை தவறான பாதைக்கு அழைப்பது, மின்னணு சாதனங்கள் மூலம் பெண்களின் மனது புண்படும்படி நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை மூவரும் மறுத்தனர்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி லியாகத் அலி, பின்னர் வழக்கு விசாரணையை, வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு, பேராசிரியை நிர்மலா, முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கானது வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள முவரும் தனித்தனியாக மனித தாக்கல் செய்துள்ளனர். அதில் இந்த வழக்கானது அடிப்படை முகாந்திரம் இல்லாத ஒன்று எனவும், எனவே இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.