அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக் கொடியில் கருப்பு சிவப்பு நிறங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக் கோரி டிடிவி தினகரன் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: ""அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொடியைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அதிமுகவின் கொடியில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியதற்காக டிடிவி தினகரன் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக முதலவர் தரப்பில், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் அதிமுகவின் கொடியைப் போன்றே தனது கட்சியின் கொடியையும் வடிவமைத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என தன்னைக் காட்டிக் கொள்வதற்காக அம்மா என்ற பெயரையும், அவரது படத்தையும் கட்சிக் கொடியில் பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தமிழகத்தில் கருப்பு சிவப்பு நிறங்கள் என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று. இந்த வண்ணங்கள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் காலங்களில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கருப்பு, சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்துவதில் எந்த கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.