ஆண்டிப்பட்டி: ஆர்.கே.நகர் தேர்தலை போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவும் என்றும் நாங்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிப்போம் என தினகரன் கூறினார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். அவருடன் கட்சியின் தொண்டர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் உண்ணாவிரதத்தினை முடித்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், உண்ணாவிரதம் ஆட்சியாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டிப்பட்டியில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் ஆர்.கே. நகரில் முடிவடையும். சென்னை, ஆர்.கே.நகரை போல, 20 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெறும். அதிமுக தோல்வியை சந்திக்கும் என்றார்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அமமுகவில் உள்ளனர். துரோகிகளிடம் இரட்டை இலை சின்னம் உள்ளது. தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை தற்போது ஆட்சி செய்பவர்கள் நிறைவேற்றவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் மாற்றத்தை கொண்டுவர தயாராகி வருகின்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் என்ன தவறு செய்தார்கள் என ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்பார்கள்.
18 தொகுதிகளில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய தினகரன் ஆயுட்காலம் வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை. அப்படியொரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என தினகரன் கூறினார்.