டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களை தொழில்
நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்களும், பள்ளிகள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அது போன்று, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதனுடன், வருவாய் துறை ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் சார்பில் வெளியிடப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கடிதத்தையும் இயக்குநர் அலுவலகம் இணைத்துள்ளது.
அதில், டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதோடு, கல்லூரி வளாகங்களைத் தூய்மையாகவும், தண்ணீர் தேங்காமலும் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறின்றி, கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தி மற்றும் லார்வா புழு உற்பத்திக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் ரூ.5,000 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.