பள்ளி பாடத் திட்டத்தில் மீண்டும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு அடுத்த கல்வியாண்டு முதல் 7-ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு அடுத்த கல்வியாண்டு முதல் 7-ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
 மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவரும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலருமான எம்.சங்கிலி தாக்கல் செய்த மனுவிவரம்:
 இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சுபாஷ் சந்திரபோஸþடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடி பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினர் இவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் 1978-1979 ஆண்டு ஆறாம் வகுப்பு பாடத்தில் இவரது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2018-2019 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் அப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 அதில், முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு 2019-2020 கல்வியாண்டில் இருந்து ஏழாம் வகுப்பு பாடத்தில் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com