அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், விடுமுறை நாள்களைக் கருத்தில் கொண்டு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க மேலும் 5 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் மனைகளை வாங்கியோரின் நலன்களைக் பாதுகாக்கும் வகையிலும், அந்த மனைப் பிரிவுகளுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் நோக்கத்திலும் மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்படி, அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள், மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க ஆறு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த கால அவகாசம் நவம்பர் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளான கடந்த 3-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தது.
மேலும், தீபாவளி பண்டிகையை ஒட்டி, அடுத்தடுத்து விடுமுறை நாள்களாக இருந்தன.
இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறைப்படுத்த குறுகிய கால வாய்ப்புக் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, அதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக (www.tnlayoutreg.in) வரும் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 16-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.