கடலூரில் மாவட்ட எஸ்.பி. கண்ணெதிரே லஞ்சம் பெற்ற 2 காவலர்கள் ஆயுதப் படைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் சனிக்கிழமை வேப்பூர் பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். வேப்பூரில் அவரது காருக்கு முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை, நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த காவலர்கள் மறித்தனர். பின்னர், சரக்கு வாகன ஓட்டுநரிடம் காவலர்கள் பணம் பெற்றதை தனது காரிலிருந்தே எஸ்.பி. கண்காணித்தார். பின்னர், அந்த வாகன ஓட்டுநரிடம் எஸ்.பி. தனியாக விசாரணை நடத்தினார். அதில், காவலர்கள் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக, ஆவினங்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிறுப்பாக்கம் காவலர் நந்தகுமார் ஆகியோரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார். இந்த உத்தரவு பணியிலிருந்த இருவருக்கும் வயர்லெஸ் கருவி மூலமாக தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சரக்கு வாகன ஓட்டுநரிடம் போலீஸார் லஞ்சம் பெற்றதை எஸ்.பி. சீருடையில் இல்லாமல் கவனித்துக் கொண்டிருந்ததால் அவர்களால் எஸ்.பி.யை அடையாளம் காண முடியவில்லை. பணியிடமாற்ற உத்தரவோடு, துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதால் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.