ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பழைய சிலைகளை சீரமைத்து உற்சவங்கள் நடத்த எம்.எல்.ஏ எழிலரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக பிரசித்தி பெற்றதாகவும், தொன்மை வாய்ந்த கோயிலாகவும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் பலநூறு ஆண்டுகளாக தொன்றுதொட்டு விழாக்கள், சுவாமி புறப்பாடு என பல்வேறு உற்சவங்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. பஞ்சபூதத் தலங்களில் மண்தத்துவக் கோயிலாக போற்றப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை, சுவாமி புறப்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அச்சிலைக்கு பதிலாக புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. இதில் தங்கம் எள்ளளவும் சேர்க்கப்படவில்லை எனும் சர்ச்சை எழுந்தது. இது குறித்த வழக்கு விசாரணையின் பேரில், புதிய சிலை கையகப்படுத்தப்பட்டு அண்மையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன்காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட சுவாமி புறப்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு, முக்கிய திருவிழாவான பங்குனி உத்திர விழா நடைபெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், சிவபக்தர்கள், பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர்.
எனவே, சிவபக்தர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று, அறநிலைத்துறைக்கு ஸ்தபதி வழங்கிய கருத்துருவின் பேரில், மீண்டும் தொன்மை வாய்ந்த பழைய சோமாஸ்கந்தர் சிலையைச் சீரமைத்து சுவாமி புறப்பாட்டு உற்சவங்களை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.