சென்னையில் இருந்து சனிக்கிழமை காலை கன்னியாகுமரிக்கு வந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில், ஏ.சி. பெட்டியின் கழிப்பறையில் இருந்து ரயில்வே காவல் உதவி ஆய்வாளரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
இந்த ரயில் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் கன்னியாகுமரியை வந்தடைந்தது. அங்கு பயணிகள் அனைவரும் இறங்கியதும், ரயில்வே ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ரயில் பெட்டிகளில் சோதனை மற்றும் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, ரயிலின் ஏ.சி. பெட்டி ஒன்றின் கழிப்பறையில் ஆண் சடலம் கிடப்பதைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல் ஆய்வாளர் பிரவீண் குமார், உதவி ஆய்வாளர் பிரியாமோகன் ஆகியோர் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், சடலமாக கிடந்தவர் செங்கல்பட்டைச் சேர்ந்த தயாளன் (58) என்பதும், இவர் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) குற்ற தடுப்புப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நாகர்கோவில் ரயில்வே போலீஸார், தயாளன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.