தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்திருப்பதாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பில், மதுரை பெத்தானியாபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு 3,800 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 17 பேர் உயிரிழந்தனர். நிகழாண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,020 ஆகக் குறைந்திருக்கிறது. ஆனால், எதிர்க் கட்சியினர் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர்பாக தவறான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 1,200 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை தரப்படுகிறது. இதுதவிர, 416 நடமாடும் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சல் சிகிச்சைக்காக ரூ.90 கோடி மதிப்பிலான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சலை உறுதி செய்வதற்கான சோதனை மையங்களின் எண்ணிக்கை 31-லிருந்து 131 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார்.