கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நிலையம் நடத்தி மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் சனிக்கிழமை ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் அமைப்பினர் ஆட்சியரிடம் அளித்த மனு:
கரூர் மாவட்டம் குளித்தலை ராஜேந்திரத்தில் சட்டவிரோதமாக மணல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு, சட்டவிரோதமாக காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்படும் மணல் சேமிக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணல் விற்பனை நிலையத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. அனுமதி கேட்டு இதுவரையில் விண்ணப்பிக்கவும் இல்லை. இது சட்டவிரோதம். இந்த மணல் விற்பனை நிலையத்தை அரசு அதிகாரிகள் குறிப்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். மணல் கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அரசாணை இயற்றியுள்ளது. இதை தமிழக அரசு உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளது.
எனவே கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நிலையம் நடத்தி மணல் கொள்ளைக்கு துணை போகும் பொதுப்பணி துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.