வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பாதிப்பு ஏற்படும் எனக் கண்டறியப்பட்டுள்ள 4,399 இடங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்றார் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
தூத்துக்குடியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தொற்றாநோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை நீரை சேமித்துப் பயன்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தொடர் மழை, பெருமழையால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக மழையால் 4,399 இடங்கள் பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் மீட்புப் பணியாளர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 9,500 மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில அதிக மழையால் பாதிக்கப்படும் 36 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பருவமழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்றாநோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர் ஏற்படும் பட்சத்தில் அதில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு அரசு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.