ஓசூர்: ஓசூரில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்த காரணத்தினால், தமபதியினரை பெண் வீட்டார் அடித்துக் கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் நிகழந்துள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சூடுகொண்டலபள்ளி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நந்தீஷ். பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த ஸ்வாதி என்பவரைக் காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டை விட்டு வெளியயேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் தம்பதிகள் ஓசூர் வந்து அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இவர்கள் இருவரையும் காணவில்லையென்று காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஜலஹள்ளி பகுதியில் காவிரி ஆற்றில் இரண்டு பிணங்கள் மீட்கப்பட்ட தகவல் வெளியானது. அங்கு சென்று விசாரித்ததில் அவர்கள் ஓசூரைச் சேர்ந்தஹ் நந்தீஷ் - ஸ்வாதி தம்பதியினர் என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் நடந்த விசாரணையில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த நந்தீஷை காதல் திருமணம் செய்த காரணத்தினால், ஸ்வாதி மற்றும் நந்தீஷ் இருவரையும் ஸ்வாதியின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் 5 பேர் அடித்துக் கொலை செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்வாதியின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஸ்வாதியின் சித்தப்பா உள்ளிட்ட மேலும் நான்கு பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதேசமயம் கைப்பற்றப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.