ரூ.2.85 லட்சம் கட்டணமாகச் செலுத்தி நீலகிரி சிறப்பு மலை ரயிலில் இங்கிலாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் 7 பேர் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புதன்கிழமை பயணித்தனர்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் மூலம் நீலகிரி சிறப்பு மலை ரயில் தனிப் பயணம் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி சிறப்பு மலை ரயிலில் 3 பெட்டிகளில் மொத்தமுள்ள 143 இருக்கைகள் அனைத்தையும் மொத்தமாக ரூ. 2.85 லட்சத்துக்கு சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்யலாம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் கிரஹம்லின் (30) மற்றும் போலந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சில்வியா பிலாசிக் (27) ஆகியோர் தங்கள் தேனிலவைக் கொண்டாடும் வகையில் நீலகிரி சிறப்பு மலை ரயிலை முன்பதிவு செய்து பயணித்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஆர்தர் கில்பர்ட், அவரது மனைவி சூசன் உள்பட 7 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தனி ரயில் பயணத் திட்டத்தின் கீழ் நீலகிரி சிறப்பு மலை ரயில் பயணத்தை புதன்கிழமை மேற்கொண்டனர். மேட்டுப்பாளையத்திலிருந்து இவர்கள் புதன்கிழமை காலை 9 மணி அளவில் மலை ரயிலில் ஏறி குன்னூர் வழியாக மாலை 3 மணிக்கு உதகை வந்தடைந்தனர். இவர்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா அலுவலர் சசிதர் வழிகாட்டியாக உடன் வந்தார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தனி ரயில் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டின் இரண்டாவது ரயில் பயணம் இதுவாகும். இதன் மூலம் ரூ. 2.85 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. தனி ரயிலில் பயணிக்க வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு மலை ரயில் குறித்த கையேடு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், மேட்டுப்பாளையம் மற்றும் உதகையில் உள்ள ரயில் அருங்காட்சியகங்களை இவர்கள் பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கிலாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் மலை ரயில் பயணத்தை வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர் என்றனர்.