உதகையில் தென்மேற்கு பருவ மழைக் காலம் முடிவுக்கு வந்து பனிக் காலம் தொடங்கிவிட்டது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் உதகை நகர்ப்புறம், புறநகர்ப் பகுதிகளில் உறைபனி கொட்டியுள்ளது. உதகையின் புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை பூஜ்யம் டிகிரி வரை பதிவானதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் முடிவுக்கு வந்தபின் கடந்த சில நாள்களாக உதகையில் நீர்ப்பனி கொட்டி வந்த நிலையில், உதகை, புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவில் உறைபனி கொட்டியது.
இதில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4 முதல் 5 டிகிரி வரை புதன்கிழமை அதிகாலையில் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் புறநகர்ப் பகுதிகளிலும், நீர்நிலைகளையொட்டியுள்ள சதுப்புநிலப் பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி வரை பதிவாகியுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளதால், உதகை அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவிலுள்ள மலர்ச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கேத்தி மெலார் என அழைக்கப்படும் செடிகளைக் கொண்டு போர்வை போலப் போர்த்தப்படுகிறது. உறைபனி காரணமாக, தண்ணீர் வசதி இல்லாத மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, தேயிலைச் செடிகளும் கருகத் தொடங்கியுள்ளன. இதனால், தேயிலை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.