சபரிமலையில் அனைத்து பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி, சேலத்தில் ஐயப்ப பக்தர்கள் செவ்வாய்க்கிழமை (அக்.9) உண்ணாவிரதம் இருந்தனர்.
சேலம் நாட்டாண்மை கழகக் கட்டடம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் தலைவர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். ஜெயராம் கல்லூரித் தாளாளர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார்.
பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.பி.கோபிநாத், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சந்தோஷ்குமார், சமாஜத்தின் நிர்வாகிகள் வெங்கடேஷ், பாலசுந்தரம், ராஜா, ஜவாஹர்லால், மல்லிகார்ஜுனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் ஐயப்ப பக்தர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, கல்லூரி மாணவிகள் விளக்கேற்றி, கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.