அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழிப்புக்கு பொது சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஊழலை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் "தி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பின் இந்தியக் கிளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 215 மாவட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், அவர்கள் எதிர்கொண்ட ஊழல் அனுபவங்கள் குறித்து பல்வேறு வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைகளைப் பெற்றது.
அவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்திலிருந்து இதில் பங்கேற்றவர்களில் 52 சதவீதம் பேர் அரசு சேவையைப் பெற கையூட்டு தர வேண்டியிருப்பதாக கூறியுள்ளனர்.
தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திர பதிவுத் துறை. 44 சதவீதம் ஊழல் இத்துறையில் தான் நடப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மின்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டவற்றில் 25 சதவீதம் ஊழல் நடப்பதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க, பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றி செயல்படுத்துவதுதான் ஒரே வழி. இந்தச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.