இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி குறைவான விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே மு.க.ஸ்டாலின் இதில் குறை கூறி வருகிறார் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒரிசா மாநிலத்தில் புயல், மழை காரணமாக கடந்த 4 நாள்களாக நிலக்கரி அங்கிருந்து வரவில்லை. மின் வாரியத்திலும் கையிருப்பு குறைந்து வந்தது. புயல், மழை தாக்கம் காரணமாக தால்ச்சர் மற்றும் கோலாப்பூர் ஆகிய இடங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வரும் பாதைகளில் பழுது ஏற்பட்டது. இதனால், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் மின் விநியோகத்தில் தடை இருந்தது. மின்பாதையில் பழுது ஏற்பட்டதன் காரணமாக 2,000 மெகாவாட் மின்சாரம் தடைபட்டது. அதனைச் சீர்செய்ய முழு முயற்சி எடுக்கப்பட்டு, தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இந்தப் பிரச்னை ஓரிரு நாள்களில் சரியாகி விடும்.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை என்பதே கிடையாது. வெளிநாடுகளில் 2 தனியார் நிறுவனங்களிடமிருந்து டெண்டர் முறை இல்லாமல் திறந்த முறையில்தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. திமுக ஆட்சியிலும் இதேபோல இறக்குமதி செய்யப்பட்டது. உள்நாட்டு நிலக்கரியின் உற்பத்தி விலை குறித்து தவறான தகவலை மு.க.ஸ்டாலின் தருகிறார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதற்கான மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உள்நாட்டில் கிடைக்கும் நிலக்கரியை விட இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி குறைவான விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே மு.க.ஸ்டாலின் இதில் குறை கூறி வருகிறார்.
தமிழகத்தில் இதுவரை 4 லட்சம் பேர் விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு விவசாய இலவச மின்சார திட்டத்தில் 21,000 இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆண்டுதோறும் 10,000 மின் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது 800 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் இன்னும் 2 மாதத்தில் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும். காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். முதல் கட்டமாக 800 உதவிப் பொறியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர் என்றார் அமைச்சர் பி.தங்கமணி.