தமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதியுதவியை மத்திய அரசு அளிக்கும் என்று மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை துறைமுகத்தில் ரூ.17 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பயணிகள் முனையம் திறப்பு, துறைமுக தின விழா வெள்ளிக்கிழமை துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் முனையத்தைத் திறந்து வைத்துப் பேசியது:
பழைமையான தமிழ் மொழி, கோயில்களைக் கொண்ட தமிழகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே 2-ஆவது இடத்தில் உள்ளது. தூய்மையான நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் வளர்ச்சி அடைந்துள்ளது. சிறந்த கலாசாரம் நிறைந்த மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை சுமார் ரூ.140 கோடியை மத்திய அரசு உதவியாக அளித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி-கோவளம் பயணிகள் கப்பல் சுற்றுலா திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் மத்திய அரசு தேவையான நிதியை வழங்கும்.
சுற்றுலா வளர்ச்சியில் சாதனைகள்: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது உலகில் 65-ஆவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 3-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனைபடைத்துள்ளது.
சீனாவில் இருந்து ஆண்டுதோறும் 14 கோடி பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இவர்களில் 15 லட்சம் பேர் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 1.5 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அல்போன்ஸ்.
தமிழக அரசுக்கு பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை: இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியது:
கன்னியாகுமரி- சென்னை இடையேயான கடல்வழிச் சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சென்னைத் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன், சுற்றுலாத் துறை ஆணையர் வி.பழனிகுமார், துறைமுகத் துணைத் தலைவர் சிரில் ஜார்ஜ், செயலர் மோகன், துறைத் தலைவர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.